நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கும் அதிகாரம் தலைவருக்கே.. ஸ்டாலின் பேச்சுக்கு அழகிரி பதில்
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் மட்டுமே உண்டு எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

கட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுகவில் இருந்து நீக்கப் பட்ட மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுக்கும் படி கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலவும் நிலையில், ஸ்டாலினின் இந்த பேட்டி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், இன்று மதியம் சென்னை வந்துள்ள மு.க.அழகிரி. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஸ்டாலினின் பேட்டி தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, ‘கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம், தலைவருக்கும், செயலாளருக்கும் மட்டுமே உண்டு,' என அழகிரி பதிலளித்தார்.
அதேபோல், ஜி.கே.வாசன் புதிய கட்சி துவங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘அது அவரது ஜனநாயக உரிமை' என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications