பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - பட்டுக்கோட்டையில் பரபரப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் முரளிகணேஷ், பாஜகவின் மாநில வக்கீல் பிரிவு துணைத்தலைவராக உள்ளார். கடந்த ஒரு வார காலமாகவே முரளிகணேசின் செல்போனிற்கு தரக்குறைவாக மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முரளி கணேஷ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும், வீட்டின் மாடி மீதும் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த போது முரளிகணேஷ் வீட்டில் இல்லை எனத் தெரிகிறது. சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்ததும், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் முன் விரோதத்தினால் நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பட்டுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பட்டுக் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.