மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வராதா, மத்தியில் ஒரு நல்ல ஆட்சி வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஒரு ஜனநாயகத்தை கொன்று கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சியை அகற்றிட முடியாதா என்கிற நிலையில் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் இன்று நடந்த திமுக 2வது நாள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில்,
தோழமை கட்சியின் தலைவர்கள் உரையாற்றிய பிறகு நிறைவாக திமுக தலைவர் கலைஞர் உரையாற்ற இருக்கிறார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலின் வியூகத்தை அமைத்து தர இருக்கிறார்.
இன்றைக்கு தொலைக்காட்சியினர், பத்திரிக்கை உலகத்தை சார்ந்து இருக்கக் கூடியவர்கள் அவர்களது விருப்பதற்கு ஏற்ப கூட்டணியை குழப்பிக்கொண்டு, அவர்களாக ஒரு கூட்டணியை அமைத்து இன்றைக்கு சில செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கலாம்.
அதற்கு பல நேரங்களில் கலைஞர் பல விளக்கங்களை தந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் இங்கே கூடியிருக்கிறவர்கள் நிறைவாக கலைஞர் ஆற்றவிருக்கிற உரையாற்றும்போது நமக்கு வியூகம் அமைத்து தரவிருக்கிறார். அது என்ன என்று இங்கு காத்திருக்கிறார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களே, கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களே, ஆணையிடுங்கள். அது உங்கள் பணி. அதனை செய்து முடிப்பது இளைஞர் அணி என இங்கு நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.
யார் நம்மோடு கூட்டணி வருகிறார். யாரோடு நாம் கூட்டணி இருக்கக் கூடாது என ஏற்கனவே நமது கழகத்தின் இதயமாக இருக்கக் கூடிய பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றி நீங்கள் உரையாற்றுகிறபோது அதை குறிப்பிட்டு சொல்லியிருந்தாலும், அதே உணர்வோடுதான், இந்த மேடையில் இருக்கிற எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, எதிரிலே அமர்ந்திருக்கக் கூடியவர்களும் அதே உணர்வோடுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல். இன்றைக்கு தமிழகத்தில் நம்முடைய மக்களிடத்திலே உள்ள உணர்வு என்னவென்று கேட்டால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வராதா, மத்தியில் ஒரு நல்ல ஆட்சி வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஒரு ஜனநாயகத்தை கொன்றுக்கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சியை அகற்றிட முடியாதா என்கிற நிலையில் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை என்றார் அவர்.