ஜெய்ப்பூர் பிரிமியம் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாஞ்சி இயக்கம் கோரிக்கை
நெல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஜெய்ப்பூர் -மதுரை பிரிமியம் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்பூர்-மதுரை பிரிமியம் ரயிலை ஜெய்பூர்-கன்னியாகுமரி பிரிமியம் ரயிலாக அறிவிக்க வேண்டும். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள தமிழகத்தின் ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தங்க நாற்கர ரயில்வே பாதையை முதல் கட்டமாக கன்னியாகுமரி-சென்னை இடையே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாஞ்சி இயக்கம் சார்பில் நான் 2 கட்ட உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன்.
முதல் கட்ட உண்ணாவிரத போராட்டம் வரும் 24ம் தேதி செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை முன்பு நடைபெறும். 2ம் கட்ட போராட்டம் ஆகஸ்ட் 7ம் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலுள்ள மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அலுவலகத்தின் முன்பு நடைபெறும்.
இந்த உண்ணாவிரத்தில் சமூக ஆர்வலர்கலும் பங்கேற்கலாம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.