பாகுபலியை மறந்துருங்க.. மகாபலி வருகிறார் பராக் பராக் பராக்.. விழாக் கோலத்தில் கேரளா!
சென்னை: மலையாள மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கேரளாவில் களைகட்டியுள்ளன. தமிழகத்திலும் மலையாள மக்கள் வசிக்கும் திருப்பூர், கோவை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களிலும் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை வருகிற 28ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 10 நாட்களில் ஹஸ்தம் நட்சத்திரட் தொடங்கி திருவோணம் வரை மலையாள பெண்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 19ம் தேதி தொடங்கியது.

மகாபலி மன்னன்
கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை திருநாளைக் காண பூலோகம் வருகிறார் என்பது ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டும்... சுவையான விருந்துகளை சமைத்தும், நடனமாடியும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

மகிழ்ச்சியில் மக்கள்
மன்னன் மகாபலி ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பெய்தது. மக்கள் சுபிட்சமுடன் வாழ்ந்தனர். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் மன்னனின் பெருமையை தினமும் புகழ்ந்தனர். மன்னனின் ஆட்சித் திறனை கண்ட இறைவன் அவனை சோதிக்க விரும்பினார்.

வாமன அவதாரம்
மகாபலியின் இறை பக்தியை அறிய மன்னன் முன்பு வாமனா அவதாரத்தில் தோன்றிய இறைவன் மன்னனிடம் 3 அடி நிலம் கேட்டார். அவரும் வந்திருப்பது இறைவன் என்பதை அறியாமல் நிலம் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

மூன்றடி நிலம்
வாமனா உருவில் இருந்த மகாவிஷ்ணு ஒரு அடியில் நிலத்தையும், 2வது அடியில் விண்ணையும் அளந்து விட்டார். 3வது அடிக்கு இடமின்றி காலை தூக்கியவாறு நின்ற இறைவனை பார்த்து செய்வதறியது திகைத்த மன்னன் 3வது அடியை தனது சிரசில் வைத்திட தலை தாழ்த்தி நின்றார்.

பாதாள லோகத்தில் மகாபலி
வாமனன் உருவில் நின்ற இறைவன் மன்னனின் தலையில் கால் வைக்க அவர் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார். இவ்வாறு பாதாள லோகம் சென்ற மன்னனின் இறை பக்தியை மெச்சிய இறைவன் அவனுக்கு வேண்டும் வரம் தருவதாக கூறினார்.

திருவோணத்தில் மகாபலி
இதைக்கேட்ட மன்னன் ஆண்டுதோறும் சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் என் நாட்டு மக்களை பார்க்க வரம் அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறைவனும் அந்த வரத்தை மகாபலி மன்னனுக்கு கொடுத்து மறைந்தார்.

மக்களை காண வரும் மன்னன்
அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் திருவோணம் நட்சத்திரத்தில் கேரள மக்களை பார்க்க அவர்கள் நேசித்த மன்னன் மகாபலி வருவதாக ஐதீகம்.

ஆடிப்பாடி மகிழ்ச்சி
இப்படி தங்களை சந்திக்க வரும் மன்னனை வரவேற்பதற்காகவே கேரள பெண்கள் தங்களது வீடுகளின் முன்பு மாக்கோலம் போட்டு மணக்க... மணக்க... ஓணம் பண்டிகையை வரவேற்கிறார்கள். இதற்காக குமரி மாவட்டத்தில் பிரபலமான தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரளாவுக்கு கிலோ கணக்கில் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது.

பல வண்ண மலர்கள்
தினந்தோறும் வண்ண வண்ண மலர்களால் வாசல்களை அலங்கரித்து வருகின்றனர் மலையாள மக்கள். ஓணம் பண்டிகை தினத்தன்று மிகப்பெரிய அத்தப்பூ கோலத்தை போட்டு பூக்களால் வீட்டு முற்றத்தையே நிரப்பி விடுவார்கள். கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் கேரளப் பெண்களால் போடப்படும் இந்த அத்தப்பூ கோலம் மிகவும் அழகுமயமாக காட்சி அளிக்கும்.

ஓணம் விருந்து
கேரளா மாநிலம் கொச்சியில் ஒணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக பாரத் பெட்ரோலியம் சார்வில் 16000 பேருக்கு ஒணம் சதயா எனப்படும் சுவையான சைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ரசித்து உண்டனர். ஆண்டுதோறும் இதுபோன்று விருந்து நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அப்போது மகாபலி போல வேடமணிந்த ஒருவர் விருந்து உண்டவர்களை சந்தித்து வாழ்த்துக்களை கூறி ஆசி வழங்கினார்.

கல்லூரிகளின் கொண்டாட்டம்
கேரளா மாணவர்கள் மகாபலிசக்கரவர்த்தி மற்றும் வாமணன் போன்று வேடமணிந்தனர். மாணவ, மாணவிகளின் திருவாதிரை நடனம், தமிழக மற்றும் கேரள பாரம்பரிய நடனங்கள், பாட்டுகளை பாடினர். பிரேமம் பட ஹீரோ நிவின் பாலி ஸ்டைலில் கல்லூரி மாணவிகள் சிலர் வேஷ்டி அணிந்து கொண்டு கல்லூரி வந்திருந்தனர்.
படம்: நிவின் பாலி பேஸ்புக்

தமிழகத்திலும் ஓணம்
தமிழகத்திலும் ஓணம் பண்டிகை கேரளாக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் களை கட்டியுள்ளது. அவர்களும் இன்று தங்களது வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். சித்தோடு அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications