விஜயகாந்த் வந்ததும் ‘மக்கள் நலன்’ காணாமல் போய் விட்டது... சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: தேமுதிக கூட்டணியில் சேர்ந்ததுமே மக்கள் நலன் காணாமல் போய், தங்கள் கூட்டணி பெயரையே மக்கள் நலக்கூட்டணியினர் மாற்றி விட்டனர் என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு தேமுதிக இணைந்து கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்ற புதிய கூட்டணி நேற்று அமைந்துள்ளது.
இந்தப் புதியக் கூட்டணி குறித்து மற்ற கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

கூட்டணி பெயர் மாற்றம்...
விஜயகாந்த் இவ்வளவு நாள் கழித்து கூட்டணி குறித்து முடிவு செய்துள்ளார். இது அவர்களின் கட்சி முடிவு என்றாலும், இதில் என்ன வருத்தம் என்றால், இதுவரை மக்கள் நலன், மக்கள் நலன் என்று பெயர் சூட்டி, கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தவர்கள் இன்றைக்கு அதை மறந்து, விஜயகாந்தை சந்தித்து பேசிய பிறகு தங்கள் கூட்டணி பெயரையே மாற்றி விட்டார்கள்.

மக்கள் நலன்...
கூட்டணி பெயரை மட்டும் அவர்கள் மாற்றவில்லை மக்கள் நலன் என்பதையும் மாற்றியிருக்கிறார்கள். இதில் இருந்து அவர்களுக்கு எங்கே மக்கள் நலன் இருக்க போகிறது? தங்கள் நலன் தான் முக்கியம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

சரத்குமாரின் வருகை...
தே.மு.தி.க. நாங்கள் கூட்டணி அமைத்ததை பார்த்து பயந்து தான் சரத்குமாரை அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் இணைத்திருக்கிறார் என்று வைகோ கூறியிருக்கிறார். தேர்தலில் தாங்கள் அமைத்த மக்கள் நலக்கூட்டணி தேறாது என்று நினைத்து தான் அவர்கள் விஜயகாந்திடம் கெஞ்சி கூத்தாடி சேர்ந்து இருக்கிறார்கள்.

பயமே இல்லை...
பயம் என்ற வார்த்தையை கேள்விப்படாதவர் எங்கள் அம்மா' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications