டாஸ்மாக் கடை அமைக்க பொது மக்கள் கடும் எதிர்ப்பு.. அதிமுக கொறடா ராஜேந்திரன் வீடு முற்றுகை
அரியலூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்: புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரியலுர் தாமரைக்குளத்தில் உள்ள அதிமுக கொறடா ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அக்கடைகளின் ஊழியர்கள் தங்களுக்கு மாற்று பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள கடைகளை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர் கடைகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
அரியலூர் அய்யப்பன் ஏரி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அரியலுர் தாமரைக்குளத்தில் உள்ள அதிமுக கொறடா ராஜேந்திரன் வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அறியலூர் இய்யப்பன் ஏரி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை தடுக்கக் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.