2016-ல் யாருக்கு பாடம் புகட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வர்: ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி
கடலூர்: 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு பாடம் புகட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் மழை நிவாரணம் வழங்கக் கோரி நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க விஜயகாந்த் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
இதனால் அந்த படத்தை தேமுதிகவினர் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர், தேமுதிகவினர் பேனர், கொடிகளை எரித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம், புதுவையிலும் வெடித்தது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்க வேண்டாம்; 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கடலூரில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு யாருக்கு பாடம் புகட்டுவதை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்... அதை நீங்கள் சொல்லக் கூடாது;
நான் காலையில் எழுந்து பேப்பரே படிப்பதில்லை; பார்த்தசாரதி போன்றவர்கள் படித்து சொல்வதை கேட்டுக் கொள்வேன்.. அப்படி ஒன்றும் படிக்கிற அளவுக்கு பேப்பரில் என்ன இருக்கிறது என்று கூறினார்.