பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப் பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால், அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார்.
அற்புதம்மாள் கோரிக்கையின் அடிப்படையில் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு இம்மாதம் 8ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் சிறுநீரகத் தொற்று தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இம்மாதம் 13ம் தேதி அவருக்கு கண் பார்வை தொடர்பாக சோதனைகள் செய்யப் பட்டன.
இந்த சோதனைகளின் அடிப்படையில் இன்று காலை புழல் சிறையில் இருந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.