கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூச்சு- திமுக கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி, கல்வராயன்மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை பெரியார் அவர்களின் பெயர் மீது சில விஷமிகள் காவி வண்ணத்தை பூசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகம் முழுவதும் சில நாட்களாக, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை கருத்து ரீதியாகவோ, தத்துவங்கள் ரீதீயாகவோ எதிர்கொள்ள முடியாத கயவர்கள், யாருமற்ற நேரங்களில் காவி வண்ணத்தை தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அல்லது பெயர்ப்பலகையின் மீது பூசி தங்களது கோழைத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தை சுயமரியாதை மண்ணாக்கிய தந்தை பெரியார் அவர்களை இதுபோன்ற செயல்களால் இழிவுபடுத்திவிடலாம் என எண்ணும் மனநோயாளின் மீது இந்த அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

இந்த அதிமுக அரசாலும், காவல்துறையாலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது எனும் நினைப்பே இதுபோன்ற செயல்கள் தமிழகத்தில் தொடந்து நடைபெற காரணமாக உள்ளது. உடனடியாக அரசும், காவல்துறையும் இதுபோன்ற கயமை செயல்களை செய்யும் கயவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிடில், எங்களது திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல் பெற்று அதிமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications