ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் வேட்புமனுவை ஏற்க கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். இரட்டை இலையை முடக்கியுள்ள தேர்தல் ஆணையம் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் ஆர்கே.நகர் தொகுதியில் தனது சின்னத்தை அடையளப்படுத்தும் வகையில் தொப்பியுடன் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரவீன் நாயரிடம் மனு
சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தேர்தல் ஆணைய அதிகாரி பிரவீன் நாயரிடம் மனு அளித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வேட்புமனுவை நிராகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று ஜோசப் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜோசப் சென்னை ஹைகோர்ட்டில் அண்மையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நிராகரிக்க வேண்டும்
அதில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி. தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும். வழக்கில் தொடர்பு இருந்தாலோ அல்லது வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் விதிக்கப்பட்டாலோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்த்ல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் தான் மனுதாரர் அணுக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி ஜோசம் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.