சத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, யாருக்கும் காயம் இல்லை
வழக்கறிஞர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு: சத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் வீட்டில் வெடி குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி. வழக்கறிஞரான இவர் நேற்றிரவு தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டதை தொடர்ந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். இதில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றது தெரியவந்தது.
இந்த குண்டு வீச்சினால் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் சேதமடைந்தது. இதுதொடர்பாக ராஜாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் ராஜாமணியின் மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் தொடர்பாக குண்டு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் விசாரணையை தீவிரபடுத்தியுள்ள போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.