சேலம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு- விற்பனையாளர் பலி
சேலம்: சேலம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் விற்பனையாளர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பிரதான சாலையில் இயங்கி வரும் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளராக கங்கவள்ளி தாலுகா நாவலுாரை சேர்ந்த செல்வம் பணிபுரிந்தார்.
கடையின் நேரம் முடிந்ததும் கடையை உட்புறமாக மூடிவிட்டு உள்ளே படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை தீப்பிடித்து எரிந்தது.
மயங்கிய நிலையில் இருந்த செல்வத்தை பொதுமக்கள் மீட்டு வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.