பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு – நள்ளிரவில் அமல்
சென்னை: நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.11 குறைந்து 63 ரூபாய் 94 காசாகவும், டீசல் விலை ரூபாய் 2.15 குறைக்கப்பட்டு 55 ரூபாய் 93 காசாக இருக்கும்.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இது 8 ஆவது முறை என்பது கவனிக்கத்தக்கது.