ஓ.. இதுதான் கரண்ட்டா?... 100 ஆண்டு கால இருளர் வாழ்வின் இருளை விரட்டிய அமைச்சர் தங்கமணி!
82 இருளர் குடும்பங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை முட்டுகிறது என்று சொல்லிக் கொண்டாலும், இன்னும் கரண்ட்டே பார்க்காத பகுதிகள் நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. எத்தனையோ கட்சிகள் ஆட்சி மாறியும் பல மலை கிராமங்களில் இந்த அவலம் நீடித்து வருவது நூற்றாண்டு விந்தைதான். முதல்முறையாக புதிதாக கரண்ட்டை பார்த்த மக்களின் செய்திதான் இது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ளது கிராமம் பெட்டமுகிளாலம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மொத்தமாக 82 வீடுகள்தான் இருக்கும். இந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கரண்ட் கிடையாது. இந்த பகுதி மக்கள் கரண்டையே பார்த்ததும் கிடையாது. இது வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமம் என்பதால் யானைகள் போன்ற வனவிலங்குகளும் நடமாடிக் கொண்டே இருக்கும்.

எனவே வனவிலங்குகள் அச்சத்திலிருந்தும், தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்கவும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கரண்ட் வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வந்தனர். இருளர் மக்களின் இந்த கோரிக்கையை கால்நடைதுறை அமைச்சரும், அதே மாவட்டத்தை சேர்ந்தவருமான பாலகிருஷ்ணன், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் சொல்ல, அமைச்சரோ அதற்கான ஏற்பாட்டினை செய்து, 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்இணைப்பை தர நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்காக நேற்றுமுன்தினம் இருளர் பகுதியில் இதற்கான திட்டத்தினையும் துவக்கி வைத்தார். அதன்படி மின்சார இணைப்பிற்கான ஸ்விட்ச்சையும் அமைச்சரே தன் கையால் ஆன் செய்தார். அப்போது அங்கிருந்த விளக்குகள் பளிச்சிட்டன. 100 வருடங்கள் கழித்து மின்சாரத்தை கண்ட மக்கள் துள்ளி குதித்தனர். கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, விரைவில் அந்த பகுதிகளில் சாலைவசதி, குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் உறுதிமொழி அளித்ததுடன், பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் இருளர் மக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications