வீரர்களின் உயிருக்கு பவுன்சரால் ஆபத்து! இந்தியா-ஆஸி. தொடரை ரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு
மதுரை: பிலிப் ஹியூக்ஸ் மரணத்தையடுத்து இந்திய வீரர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதால், அந்த கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்த கே.பிரவீன்குமார், ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பிலிப் ஹியூக்ஸ் (25) என்ற வீரர் பவுன்சர் பந்து வீச்சால் அடிபட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கிரிக்கெட்டில் காயமடைவது சகஜம் என்றாலும், தற்போது ஆபத்து குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. வீரர்கள் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் விளையாடுகின்றனர். இருந்தாலும் பவுன்சர் பந்து குறித்து கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குழு 3 மாத சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் விளையாடுவது உயிரை பணயம் வைத்து விளையாடுவதற்கு சமம்.
முன்னெச்சரிக்கையுடன் விளையாடினாலும் வீரர்கள் இறக்கும் நிலை உள்ளது. எனவே இதுபோன்றதொரு விளையாட்டு அவசியமா என்ற யோசனை எழுந்துள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு பிசிசிஐ வசம் உள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை மத்திய அரசு ஏற்று நடத்தவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை திறமையாகவும், நம்பிக்கை தரும் வகையில் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
அதுவரை கிரிக்கெட் அணி வீரர்களின் உயிருக்கும், உடலுக்கும் முழு உத்தரவாதம் தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அட்டவணை வெளியிடப்பட்ட போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அங்கிருந்து இந்திய அணியை திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications