எடப்பாடி பழனிச்சாமி, 4 அமைச்சர்களை டிஸ்மிஸ் பண்ணுங்க.. தாமரைக்கனி மகன் கேஸ்!
சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த அமைச்சர்கள் 4 பேரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசிய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்களையும், அவர்களுக்கு அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ஆணழகன் இவர், முன்னாள் எம்எம்ஏ தாமரைக்கனியின் மகனாவார். எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதியுடன் நடைபெற்றுள்ளது. சிறையில் உள்ள குற்றவாளியை அமைச்சர்கள் சந்திப்பது ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது. எனவே முதல்வரையும், அமைச்சர்கள் நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மார்ச் 13, 16ஆம் தேதிகளில் சபாநாயகர், சட்டசபை செயலாளருக்கு மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஆணழகன், ஆளுநர் விசாரணை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் நால்வரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 5 முறை வென்று எம்.எல்.ஏ. ஆனவர் தாமரைக்கனி. அதிரடிச் செயல்களால் தமிழகம் முழுவதும் பிரபலமானார் தாமரைக்கனி. அவரது வாரிசுகளான இன்பத்தமிழன், தங்கமாங்கனி, ஆணழகன் போன்றோர் தாமரைக்கனி அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இன்பத்தமிழன் ஒரு முறை அமைச்சரானதோடு சரி. பேசப்பட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, இப்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் தாமரைக்கனியின் மகன் ஆணழகன் தந்தையின் வழியைப் பின்பற்றி, அரசியல் ரகளையை ஆரம்பித்திருக்கிறார். அமைச்சர் ஒருவரையும், அதிமுக ஆதரவு நடிகர் ஒருவரையும் ஒருமையில் திட்டி வாட்ஸ் அப்பில் உலாவ விட்டார். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு போட்டுள்ளார்.