மதுரையில் மீண்டும் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல்
மதுரை: மதுரை வில்லாபுரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டுகளை போலீசார் நேற்று கைப்பற்றினர்.
மாட்டுத்தாவணி அருகே உள்ள உத்தங்குடியில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்கெட்டில் பிப்ரவரி 12-ந்தேதி இரும்பு பைப் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவரை மாவட்ட போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பைப் வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்புடைய 2 பேர் மேலூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு மேலூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த தங்கராஜ் என்ற தமிழரசன் (37) அவரது நண்பர் கவியரசன் என்ற ராஜா (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 பெரிய கத்திகள், 3 சிறிய கத்திகள், 7 மீட்டர் வயர், ஒரு லிட்டர் பெட்ரோல், 2 லேப்-டாப், 5 செல்போன்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மதுரை கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மதுரை வில்லாபுரத்தில் பைப் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வில்லாபுரத்திற்கு சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைத்திருந்த 2 பைப் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த குண்டுகள் வெடித்திருந்தால் அப்பகுதியில் பெரும்சேதத்தை விளைவித்திருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்