சவுதியில் சிக்கித் தவிக்கும் கணவர்: மீட்டு தர இளம்பெண் கலெக்டரிடம் மனு
நெல்லை: சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை மீட்டு தருமாறு இளம்பெண் ஒருவர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவெட்டநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி மாரிமுத்து. மாரிமுத்து தனது குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். மதுரையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஒரு நிறுவனத்தினர் எனது கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். அதனை நம்பி நாங்கள் அந்த நிறுவனத்திடம் ரூ.86 ஆயிரம் செலுத்தினோம். மேலும் சவுதி செல்ல விமான கட்டணமாக ரூ.25 ஆயிரமும் பெற்று கொண்டனர். அந்த நிறுவனம் அளித்த ஆவணங்களை வைத்து கொண்டு எனது கணவர் ஆகஸ்ட் மாதம் சவுதி சென்றார்.
ஆனால் அவருக்கு சவுதியில் குறிப்பிட்டபடி வேலை எதுவும் கொடுக்கவில்லை. இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என எனது கணவர் கெஞ்சியும் அவர்கள் அங்கு ஒரு அறையில் அவரை அடைத்து வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து நான் அந்த நிறுவனத்திடம் தகவல் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுக்கின்றனர்.
இது குறித்து நான் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் எனது கணவரிடம் 10 ஆயிரம் ரியால் செலுத்திவிட்டு போ என கூறுவதாக தெரிகிறது. எனது கணவரை மீட்டு தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.