மேடைக்கு அவசரமாக ஓடி வந்த அண்ணாமலையின் தோளில் தட்டி! கையை இறுக பற்றிய பிரதமர் நரேந்திர மோடி!
திருப்பூர்: என் மண் என் மக்கள் நிறைவு விழா மேடைக்கு அவசரமாக ஓடி வந்து இருக்கையில் அமர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தோளை தட்டிய பிரதமர் நரேந்திர மோடி கையை இறுக்க பற்றி கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கவும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கவும் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இதையடுத்து 232 ஆவது தொகுதியாக மதுராந்தகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று 233, 234 ஆவது தொகுதிகளாக திருப்பூர் மாவட்டத்தில் பாதயாத்திரை நடந்தது.
இதையடுத்து பல்லடத்தில் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோயில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. இதற்காக சூலூர் விமான தளத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து பல்லடத்திற்கு ஹெலிகாப்டரில் வருகை தந்தார்.
இதற்காக விழா நடைபெறும் இடத்திற்கு அருகே ஹெலிபேட் தயார் நிலையில் இருந்தது. ஒரு பக்கம் அண்ணாமலை, இன்னொரு பக்கம் எல் முருகன் ஆகியோருடன் வந்த பிரதமர் நரேந்திர மோடி விழா மேடைக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த கைத்தறி துண்டை பரிசாக அளித்தார் மத்திய இணையமைச்சர் எல். முருகன். இதைத் தொடர்ந்து மஞ்சள் விவசாயிகளின் விரலி மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசும் மோடிக்கு அளிக்கப்பட்டது.
இந்த விழா தொடங்கியதும் ஏற்பாடுகள் தொடர்பாக யாரிடமோ பேசிவிட்டு அவசர அவசரமாக மேடைக்கு ஓடி வந்தார் அண்ணாமலை. அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் வலது பக்கத்தில் அண்ணாமலைக்கு சீட் ஒதுக்கப்பட்டது. அவசரமாக அமர்ந்த அவரது தோளை 6 முறை தட்டிக் கொடுத்தார் பிரதமர். பிறகு அண்ணாமலை நெகிழ்ந்து கையெடுத்து கும்பிட்டபோது அவரது கையை இறுக்க பற்றி பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் விழா மேடையில் இருந்தவர்கள் எல்லாம் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
திமுக மீதான விமர்சனம், பாஜகவிலிருந்து நிர்வாகிகள் விலகல் உள்ளிட்ட விவகாரங்களில் அண்ணாமலை மீது டெல்லிக்கு அதிருப்தி இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. கூட்டணியில் இருந்த போது தொடர்ந்து அதிமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வந்ததாக கூறி அவரை அப்பதவியிலிருந்து மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என அதிமுகவினர் பாஜக தலைமையிடம் புகார் கூறியதாகவும் தகவல்கள் எழுந்தன. இப்படிப்பட்ட நிலையில் இன்று மோடி, அண்ணாமலையிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் டெல்லி தலைமையிடம் அண்ணாமலைக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது தெரிகிறது. செல்வாக்கு இல்லாமலா தமிழகத்தின் இளைய தலைவர் அண்ணாமலை என மோடி பாராட்டியிருப்பார்?












Click it and Unblock the Notifications