டாக்டர் இப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. நீக்கப்பட்ட பாமக எம்.எல்.ஏ
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பாமக எம்.எல்.ஏ. கலையரசு கூறியுள்ளார்.
அணைக்கட்டுத் தொகுதி பாமக எம்.எல்.ஏ. கலையரசு, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். தொகுதி சார்ந்த குறைகள், பணிகள் தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதேபோலத்தான் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியமும் முதல்வரைச் சந்தித்து விட்டு வந்தார்.
கலையரசுவின் செயலால் அதிர்ச்சி அடைந்த பாமக , அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியது. பாமகவுக்கு இருந்த இந்த தைரியமும், துணிச்சலும் தேமுதிகவுக்கு இல்லை. அவர்கள், அருண் சுப்பிரமணியத்தின் கட்சிப் பதவியை மட்டுமே பிடுங்கியுள்ளனர். அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்த நிலையில் பாமகவின் முடிவால் கலையரசு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் தொகுதியில் தாலுகா அலுவலகம் வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன்படி முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கவே அவரை நான் சத்தித்தேன். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டு வந்தேன்.
ஆனால், என்னை பாமகவில் இருந்து நீக்கிவிட்டனர். இதைக் கேள்விபட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் கலையரசு.
கண்டிப்பாக அவர் பாமகவுக்கு ஆதரவாக செயல்பட முடியாது என்பது மட்டும் தெளிவு....












Click it and Unblock the Notifications