மீனவர் சுட்டுக் கொல்வதே இலங்கைக்கு வேலை.. கோ.க மணி ஆவேசம்
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பாமக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.
சென்னை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் நடுகடலில் சுட்டுக் கொன்றனர். இதனைக் கண்டித்து பாமக சார்பில் கண்டனம் தெரிவித்து பேரணி நடத்தப்பட்டது.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவிற்கும் நெடுந்தீவிற்கும் இடைப்பட்ட இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ பலியானர். சரோன் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போன்று இன்று பாமக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் முன்னாள் எம்எல்ஏ கோ.க. மணி தலைமை தாங்கி நடத்தினார்.
அப்போது, கோ.க. மணி செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழக மீனவரை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளனர் என்று கோ.க. மணி குற்றம்சாட்டினார்.