சென்னை கலவரம்: மேலும் 4 பேரை கைது செய்தது போலீஸ்
சென்னையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுப் பேருந்தை தாக்கி சேதப்படுத்தியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் அரங்கேறிய வன்முறையின் போது அரசுப பேருந்தை சேதப்படுத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த 23 ஆம் தேதி அதிகாலை காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் சென்னை மாநகரின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. குடிசைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியல்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராயபுரம் மேம்பாலத்தில் 23ம் தேதி அரசுப் பேருந்தை தாக்கி சேதப்படுத்தியதாக 4 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருணாகரன், செல்வகுமார், ராஜ்குமார், ஜெய்சந்தர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.