ஸ்டாலின் மீது தாக்குதல்.. தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்; கடையடைப்பு- கல்வீச்சு!
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆர்.கே. நகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரகசிய வாக்கெடுப்பு கோரியதற்காக திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்
வலுக்கட்டாயமாக போலீசாரால் வெளியேற்றப்பட்டார். அப்போது, அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை
மு.க. ஸ்டாலின் உடன் சென்ற திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையின் முன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் அராஜகம் ஒழிக, போலீஸ் அராஜகம் ஒழிக என்றும் சபாநாயகரின் செயலைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கடையடைப்பு
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஆர்.கே.நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆர்.கே.நகர் திமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

சாலை மறியல்
சட்டசபையில் திமுகவினர் மீது நடத்திய வன்முறைகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் உருவபொம்மை எரிப்பு
காஞ்சிபுரத்தில் திமுக தொண்டர்கள் சாலையில் சபாநாயகரின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும்..
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். கட்சியின் செயல் தலைவரை தாக்கிய போலீசாரைக் கண்டித்தும் சபாநாயகர் தனபாலை கண்டித்து சாலை மறியலில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications