ஹெல்மெட்: போலீஸுக்கு குருப் பெயர்ச்சி.. நமக்கு சனிப் பெயர்ச்சி.. புலம்பும் மக்கள்!
சென்னை: இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களை ஓட்டுவோர், பயணிப்போரை போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் நீதிமன்ற உத்தரவுப்படி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்கள் ஒரு சில கடைகளில்தான் கிடைக்கிறது. இதை வாங்குவதற்கு தீபாவளி பட்டாசு கடைகளில் கூட்டம் மெய்ப்பது போல டூவீலர் ஓட்டிகள் மெய்த்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு வரை ஹெல்மெட்கள் விற்பனை ஜோராக விற்பனை நடந்தாலும் பல பகுதிகளில் உள்ள கடைகளில் தட்டுப்பாடு நிலவியதால் ஹெல்மெட் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பல இரு சக்கர வாகன ஓட்டிகள் போலீஸாருக்குப் பயந்து ஹெல்மெட் அணிந்து பயணித்ததைக் காண முடிந்தது. அதேசமயம் தைரியமாக பலர் ஹெல்மெட் இல்லாமல் சென்றதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 417Aவின்படி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் 12 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் பரவி வருவதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
போலீசாருக்கு குரு பெயர்ச்சியும்..ஹெல்மெட் அணியாதவர்களுக்கு சனி பெயர்ச்சியும் ஆரம்பமாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஹெல்மெட் இல்லாததால் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களை தாண்டி ள்ள சிற்றூர் நகர சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளில் சுமார் 40 சதவிகிதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
பல மாவட்டங்களில் போலீசார் ஹெல்மெட் போடாமல் வாகனத்தில் செல்பவர்களை பிடித்து வழக்கு போடத் தொடங்கியுள்ளனர். இந்த கட்டாய ஹெல்மெட்டால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.