கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் போலீஸ் அத்துமீறல் - விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு!
கோவை: கோவையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை 7 போலீஸ் அதிகாரிகள் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணன் வீதியைச் சேர்ந்தவர் லீலாவதி.
இவர் கடந்த 9 ஆம் தேதி லீலாவதி என்பவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
வாடகைப் பெண் கைது:
இதுதொடர்பாக அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மதுரை மேலூரைச் சேர்ந்த 45 வயது பெண்ணை உடுமலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
மகள் கோர்ட்டில் மனு:
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் மகள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
போலீசாரல் சித்ரவதை:
அதில், "லீலாவதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட எனது தாயார் உடுமலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது 7 போலீஸ்காரர்களால் மானபங்கம் மற்றும் பாலியல் ரீதியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
நடவடிக்கை தேவை:
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மிக முக்கிய குற்றச்சாட்டுகள்:
இந்த மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவில் மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது.
முதன்மை நீதிபதி விசாரணை:
இதுதொடர்பாக கோவை முதன்மை மாவட்ட நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் நீதிபதி ஒருவரும், அரசு பெண் மருத்துவரும்பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இடைக்கால தடைவிதிப்பு:
விசாரணை அறிக்கையை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் உடுமலையில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
மீண்டும் மனுதாக்கல்:
ஹைகோர்ட் உத்தரவை தொடர்ந்து கோவை முதன்மை மாவட்ட நீதிபதி சேஷசாயி முன்னிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யபட்டது. அத்துடன் ஹைகோர்ட் உத்தரவும் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு:
மனு மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு நீதிபதி தீபாவுக்கு உத்தரவிட்டார்.
மருத்துவப் பரிசோதனை:
நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிடம் நீதிபதி தீபா, அரசு பெண் மருத்துவருடன் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
பரபரப்பான குற்றச்சாட்டு:
அடுத்த மாதம் 3 ஆம் தேதி இந்த அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. உடுமலை போலீஸ் நிலையத்தில் பெண் கைதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications