தேடப்படும் எஸ்.வி.சேகர் போலீசுடன் உலா... ஆளுநரிடம் முறையிட வக்கீல் இளங்கோ முடிவு
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய கோரி வழக்கறிஞர் இளங்கோ ஆளுநரிடம் இன்று முறையிட இருக்கிறார்.
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய கோரி வழக்கறிஞர் இளங்கோ ஆளுநரிடம் இன்று முறையிட இருக்கிறார்.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது.
இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. மேலும் தேடப்படும் எஸ்வி சேகர் போலீசுடன் இருப்பது போலவும், பாஜக கட்சி தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ளும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
இதனால் தற்போது எஸ்வி சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் இளங்கோ ஆளுநரிடம் முறையிட இருக்கிறார். கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் சென்னை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைது செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் முறையிட போகிறார்.
நாளைக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். நாளைக்குள் கைது செய்யாவிட்டால் மீண்டும் ஹைகோர்ட் போகப் போவதாக தெரிவித்துள்ளார். இன்று அவர் ஆளுநரை சந்திக்க இருக்கிறார்.