தடதடத்த தருமபுரி.. புகார் அளிக்க வந்த சிறுமியை சீரழித்த எஸ்ஐ! காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்!
தருமபுரி: புகார் அளிக்க வந்த சிறுமியை காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது எஸ்ஐ பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. திருமணமான கொஞ்ச நாட்கள் எந்த பிரச்னையும் எழவில்லை. நாட்கள் செல்ல செல்ல மாமியார் கொடுமை தலைதூக்கி உள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை மாமியார் டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த சிறுமி கணவனிடம் முறையிட, அவரும் இந்த விஷயத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்து பார்த்த சிறுமி ஒருநாள் ஏரியூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (50) என்பவர்தான் பெற்று விசாரணை மேற்கொண்டிருக்கிறார். புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறுமியின் செல்போன் எண்ணையும் கேட்டுப் பெற்ற சகாதேவன் அடிக்கடி சிறுமிக்கு போன் செய்து பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி தனது ஆசை வலையில் சிறுமியை விழ வைத்திருக்கிறார்.
பின்னர் தனியாக சந்தித்து சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிய வரவே பிரச்னை பெரிதாக வெடித்திருக்கிறது. கணவன் சிறுமியை அடித்து துரத்த, மகளிர் உதவி மையத்தை சிறுமி நாடியிருக்கிறார். 18 வயது ஆவதற்கு முன்னரே சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த மகளிர் உதவி மையம், சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்ஐ சகாதேவனின் லீலைகளை குழந்தைகள் நல உறுப்பினர்களிடம் சிறுமி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து குழந்தைகள் நல உறுப்பினர் பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தில் சிறுமி வாக்குமூலம் அளித்ததையடுத்து, எஸ்ஐ சகாதேவனை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் மகளிர் போலீசார், சகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். தற்போது சகாதேவன் எஸ்ஐ பதிவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புகார் கொடுக்க வந்த சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு காவல்துறை அதிகாரியே பயன்படுத்தியிருப்பது தருமபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications