காடுவெட்டி குருவைக் கூட்டிச் சென்ற போலீஸ் வேன் மோதி குழந்தை பலி
விருத்தாச்சலம்: பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மோதியதில் 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பாமக எம்.எல்.ஏ. குரு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஜெயங்கொண்டம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீஸார் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
ஜெயங்கொண்டம் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம், உளுந்தூர்ப்பேட்டை இடையே உள்ள பூவனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென போலீஸ் வாகனம், ஒரு 2 வயதுக் குழந்தை மீது மோதி விட்டது. இதில் குழந்தை அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
அக்குழந்தையின் பெயர் தர்ஷினி. சதீஷ்குமார் என்பவரின் மகள். விபத்தைத் தொடர்ந்து குருவை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றனர் போலீஸார். பின்னர் குரு சென்னை கொண்டு வரப்பட்டார்.
மங்களம்மேடு போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.