என்கவுண்டரில் என்னை போட்டுத் தள்ளி விடுவார்கள்.. யுவராஜ் அலறல்
சென்னை: நான் சரண் அடைந்தால் என்னை என்கவுண்டரில் சுட்டு விடுவார்கள் என்று தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் கூறியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் என்னை பலிகடா ஆக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன்சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் போலீஸ் தலைமறைவாக உள்ளார். யுவராஜை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வரும் நிலையில் அவர் புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

கொலை வழக்கில் தேடுப்படும் குற்றவாளியான நான் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறேன். எனது குழந்தை, மனைவியை பார்க்க எனக்கும் ஆசை இருக்காதா? இதுபற்றி எல்லாம், ஐ.ஜி. கலெக்டர், போன்றவர்களுக்கு மனு அனுப்பி வைத்துள்ளேன். ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தலைமறைவாக இருந்து வருகிறேன்.
உண்மையை வெளிக்கொண்டு வர வெளியில் இருக்கிறேன். முறையாக விசாரித்து இருந்தால் நான் ஏன் ஓடி ஒளிகிறேன். நான் சரண் அடைய மாட்டேன். உண்மை வெளியில் தெரிய வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசார் என்னையும், என் இயக்கத்தையும் முடக்க வேண்டும் என்று பொய் வழக்கு போட்டுள்ளனர்.
என் மீதும், என் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. கோகுல்ராஜ் வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு.
நான் சரண் அடைந்தால் என்னை சுட்டு விட்டு தப்பி ஓடியபோது சுட்டுவிட்டோம் என கூற முயற்சி நடக்கிறது. அதிகாரிகள் அவர்களை காப்பாற்றி கொள்ள முயற்சிக்கிறார்கள். நான் நியாயமானவன். என்னை வேண்டும் என்றே கோகுல்ராஜ் கொலையில் முதல் குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.
இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க முயற்சி நடக்கிறது. கோகுல்ராஜூடன் இருந்த அந்த பெண் அவருக்கு தோழிதான். ஆனால் கோகுல்ராஜ் ஒரு பெண்ணுடன் பழகவில்லை. 4 அல்லது 5 பெண்களுடன் பழகி உள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே தவறாக போகிறது. இதனால் தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கூறி வருகிறேன். கோகுல்ராஜ் வழக்கில் என்னை குற்றவாளி என்று நிரூபித்தால் தண்டனையை ஏற்கத் தயார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications