பாதுகாப்புக்கு மத்தியில் மருது பாண்டியர் குரு பூஜை: முக்கிய தலைவர்கள் அஞ்சலி
சிவகங்கை: மருது பாண்டியர் குரு பூஜையையொட்டி, பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள். சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, அவர்களுக்கு பின்னர் சிவகங்கை மண்ணை ஆண்டனர்.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்ட வேண்டும் என்று போரிட்டதால் கடந்த 1801ம் ஆண்டு, அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள். பின்னர் மூன்று தினங்கள் கழித்து 27ம் தேதி இவர்கள் உடல், இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27ம் தேதி இவர்களுடைய நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மருதுபாண்டியர் குரு பூஜை
இந்த ஆண்டு மருதுபாண்டியரின் 214 ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ஆட்சியர் மலர்விழி பிறப்பித்தார். சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். சுற்றுலா, தனியார் வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. வாகனங்களின் உண்மை தன்மை அறிய போக்குவரத்து அலுவலர்கள் மூலம் சோதனை சாவடிகளில் ஆன்லைன் மூலம் பரிசோதனை நடைபெற்றது.
அரசியல் தலைவர்கள் மரியாதை
காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், பி.டி.அரசகுமார், பா.ஜ.க. சார்பில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர், அ.தி.மு.க மற்றும் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய அமைப்பினர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
2000 போலீசார் பாதுகாப்பு
இந்த விழாவுக்கு சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகளில் சிறப்பு சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்கள் பதிவிற்கு பிறகே அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications