தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: தமிழக அரசு

இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 135 பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் (தினக்கூலி தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான இன்று (வியாழக்கிழமை) அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே இத்தகவல் ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக தகவல் தொழிலாளர் துறைக்கு வந்துள்ளது. ஆகையால், மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு இன்று கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது' என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications