கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு - திருமண அழைப்பிதழ் தந்ததாக தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க, காங்கிரஸ் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.க. வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கவும் தி.மு.க.வில் எதிர்ப்பு உருவாகி உள்ளது.

இதனிடையே பா.ஜ.க., தே.மு.தி.க, பா.ம.க. கட்சிகளை தி.மு.க. அணியில் இணைக்கவும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. பா.ஜ.க. தலைமையிலான இந்த அணிக்கு 100 இடங்களை ஒதுக்கவும் தி.மு.க.வும் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், என்னுடைய இல்ல திருமண அழைப்பிதழ் கொடுக்கவே கருணாநிதியை சந்தித்தேன். இச்சந்திப்பில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை.
தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண எத்தனை கோடியை வேண்டுமானாலும் செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.
நெருப்பில்லாமல் புகையுமா?












Click it and Unblock the Notifications