சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது.. சொல்கிறார் பொன்னையன் !
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்தது இயற்கையான நிகழ்வு என பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது இயற்கையான நிகழ்வு என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க., பொதுச்செயாலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை, வானரகத்தில் நாளை நடக்க உள்ளது.
இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சொல்லி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், சசிகலாவுக்கு கட்சியின் ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட சசிகலா புஷ்பாவுக்காக மனு வாங்க லிங்கேஸ்வரன் அதிமுக அலுவலகத்துக்கு வந்தார். அவரை அதிமுகவினர் கடுமையாக தாக்கினர்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்தது இயற்கையான நிகழ்வு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது. உணர்வுகள் என்பது சிலநேரங்களில் பிரச்சனையை உருவாக்குகிறது. அதேநேரம் வன்முறையில் அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை. சசிகலா புஷ்பா கணவரை தாக்கியது கட்சியினர் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.