திமுக அனைத்து கட்சி கூட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தி.மு.க. கூட்டணி கட்சிகள் அல்லது அந்த கூட்டணியில் சேர துடிப்பவர்களை தவிர யாரும் பங்கேற்காத அனைத்துக் கட்சி கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தமாகா, மமக, உள்பட பல கட்சிகள் கலந்துகொண்டன. அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இடது சாரிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று நடந்தது சர்வ கட்சி கூட்டமா? தி.மு.க. கூட்டணி கட்சிகள் அல்லது அந்த கூட்டணியில் சேர துடிப்பவர்களை தவிர யாரும் பங்கேற்கவில்லையே. இந்த கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.
காங்கிரசும், தி.மு.க.வும் 40 வருடமாக பொறுப்பில் இருந்து இருக்கிறது. காவிரி பிரச்சினையில் என்னென்ன பேசினீர்கள்? என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை பட்டவர்த்தனமாக தமிழக மக்களுக்கு தெரிவியுங்கள். கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். 12 மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காவிரி பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை. மீண்டும் இப்போது அவர்களை நம்பி போலியான நம்பிக்கையை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டுமா? அதற்கு எல்லா கட்சிகளும் துணை போக வேண்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.