தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுதான் எங்கள் கொள்கை: பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதே தேமுதிகவின் கொள்கை என்றும் தொடர்ச்சியாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மூத்த தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவுமே செய்யாமல் கொள்கை பற்றி பேசுவது அர்த்தமில்லை. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்பதே எங்கள் கொள்கை.
அதேபோல் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் அமைப்போம். இதில் விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார்.
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு தொடர்ந்து அழைத்த கலைஞருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியதைப் போல, தேமுதிகவுக்கு தொடர்ந்து திமுக அழைப்பு விடுத்தது. ஆனால் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை எங்குமே நடைபெறவில்லை.
தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறியது குறித்து அவரிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும்.
தேமுதிக- மக்கள் நல கூட்டணி இணைந்த 'விஜயகாந்த் அணி' வரும் தேர்தலில் வென்று ஆட்சியை அமைக்கும். 'விஜயகாந்த்' அணி என அழைப்பதால் எந்த ஒரு பாதிப்பும் வராது.
தமிழக தேர்தல் களத்தில் பலமுனைப் போட்டி ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு ஆட்சி அமைந்தால்தான் தமிழகம் முன்னேற்றம் காண முடியும். இதற்காக விஜயகாந்த் அணியை ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் நலக் கூட்டணியில் இடதுசாரிகள் இருப்பதால் விஜயகாந்த் அணிக்கு பாஜக வர முடியாது.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.