எதிர்ப்புகளை கண்டுகொள்ளவில்லை.. கோவை ஈஷா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் மோடி!
சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஈஷா யோகா மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எதிர்ப்பு இருந்தாலும் அவரது கோவை பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வரும் 24-ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தால் பிரம்மாண்டமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் வனப்பகுதியில் சட்டவிதிகளை மீறி ஈஷா மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மையத்தில் சில காலம் தங்குவதற்கு வரும் பெண்களை சொந்த வீடுகளுக்குத் திரும்ப விடாமல் நிரந்தரமாக அங்கேயே தங்கும் வகையில் அவர்களது உணவில் வசிய மருந்தை வைப்பதாகவும் அந்த மையத்தின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே அந்த மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
எனினும், எதிர்ப்புகளை மீறி வரும் 24-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.