கருணாநிதி மீதான உரிமை மீறல் குழுவின் அறிக்கை சட்டசபையில் தாக்கல்: திமுகவினர் கடும் எதிர்ப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் குழுவின் அறிக்கை இன்று சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் உரிமை மீறல் குழு விசாரணை நடத்தியது. இதையடுத்து, கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை தொடர்பான விசாரணை அறிக்கை சட்ட சபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபை என்பது அதிகாரம்மிக்கது. எனவே சட்டசபையையோ அல்லது, அதன் உறுப்பினர்களையோ, ஆதாரமின்றி, அவதூறு செய்யும் வகையில் யாராவது பேசினாலோ, எழுதினாலோ, வேறு எந்த வகையிலாவது கருத்துக்களை வெளிப்படுத்தினாலோ அது உரிமைமீறல் பிரச்சினை என்று அழைக்கப்படும்.

உரிமை மீறல் நடந்துள்ளது என்று ஆளும் அல்லது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டுவர முடியும். இதன்பிறகு உரிமை மீறல் குழு, ஆதாரங்களை அலசி ஆய்வு செய்து குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அதை சபாநாயகரிடம் தெரிவிக்கும். உரிமைமீறலுக்கு உள்ளானவரை சபாநாயகர் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்துவிட்டுவிடலாம் அல்லது, நேரில் வரவழைத்து, அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க முடியும். அப்போது சபாநாயகர் நீதிபதிக்குறிய அதிகாரத்தோடு விளங்குவார். அவரது தீர்ப்பை ஏற்க வேண்டியது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு கட்டாயமாகும்.
இந்நிலையில்தான், வேளாண்துறை அமைச்சர் வைத்திலிங்கம், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார். அதில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம்தேதி வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதில் அளித்தார்.அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சில ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி புகார் கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை கடந்த 30ம்தேதி 2 பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சட்ட சபையில் தான் பேசாத விஷயங்களை பேசியதாக கருணாநிதி அறிக்கையில் கூறி இருப்பதாகவும் அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவதாகவும் சபாநாயகர் தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் கொடுத்திருந்தார். சட்டசபையில் தான் பேசாத ஒரு விஷயத்தை, நான் பேசியதாக முரசொலி பத்திரிகையில் கருணாநிதி எழுதியுள்ளார். கருணாநிதியின் செயல் உரிமை மீறலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், அதை ஆய்வு செய்ய உரிமைமீறல் குழுவிற்கு அனுப்பி வைத்தார்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டசபை உரிமை குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு சென்ற திமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றினர்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், முறையான விளக்கம் அளித்த பிறகும் உரிமை மீறல் பிரச்சினை அறிக்கை தாக்கல் செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications