விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் மீண்டும் குதூகலம்!- 20 அறைகள் கூடுதலாக புக்கிங்
டிடிவி தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் மீண்டும் புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 அறைகளை புக் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் மீண்டும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல எம் எல் ஏக்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மேலும் 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 22ம் தேதி முதல் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அஇஅதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது. இதனால் அவர்களை புதுச்சேரி கொண்டு சென்ற தினகரன் தரப்பினர், முதல்வரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்து ஆதரவு எம் எல் ஏக்களை இயக்கலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

ரிசாட்டில் எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் 20 தினகரன் ஆதரவு சட்ட சபை உறுப்பினர்களுக்கு, சின்ன வீராம்பட்டினம் தனியார் ரிசார்ட்டில் அறைகள், ஒரு வார காலத்துக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல மேலும் 20 அறைகள் தயார் நிலையில் உள்ளன.

கூடுதல் அறைகள் தயார்
இன்னும் 20 எம் எல் ஏக்கள் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்து, அவர்கள் ரிசார்ட்டுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் மேலும் 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு மொத்தம் 40 அறைகள் தினகரன் தரப்புக் கட்டுப்பாட்டில் உள்ளன.

மீண்டும் ரிசார்ட்
நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலிருந்து போலீஸ் கான்வாய் அமைத்து மிகவும் பாதுகாப்பாக தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் இந்த ரிசார்ட்டுக்கு நேற்று அழைத்துவரப்பட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு அதிகரிப்பு
விண்ட் ப்ளவர் ரிசார்ட் பகுதியில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் ரிசார்ட்டில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எம்எல்ஏக்கள் ஆலோசனை
விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 எம்எல்ஏக்களும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். குடியரசுத்தலைவரை சந்திப்பது தொடர்பாக அவர்க ஆலோசித்து வருவதாகவும், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications