பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்!
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான பஞ்சு அருணாச்சலம் இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 76.
காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1941-ல் பிறந்தவர் பஞ்சு அருணாச்சலம். கவியரசு கண்ணதாசன் இவரது சொந்த சித்தப்பா.
அறுபதுகளிலேயே தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் பஞ்சு அருணாச்சலம். கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக நுழைந்தவர் பின்னர் எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார்.
எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் என்னை மறந்ததேன்..., பொன்னெழில் பூத்தது.... ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை எழுதினார்.
தொடர்ந்து பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதினார். எஸ்பி முத்துராமன் இயக்கிய எங்கம்மா சபதம் மூலம் 1974-ம் ஆண்டு திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக நுழைந்தார்.
தொடர்ந்து மயங்குகிறாள் ஒரு மாது, துணிவே துணை, அவன்தான் மனிதன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.
1976-ல் அன்னக்கிளி படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா என அடுத்தடுத்து ரஜினியை வைத்து படங்கள் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம்.
ரஜினியை கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும், அவரை ஒரு சூப்பர் நடிகர் என நிலை நாட்டியவர் பஞ்சு அருணாச்சலம். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை பல்வேறு பரிமாணங்களில் காட்டியவர் அவர்தான்.
ரஜினி, கமலை வைத்து ஒரே நேரத்தில் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன் என இரு வேறுபட்ட படங்களை எடுத்து இரண்டையுமே சூப்பர் ஹிட்டாக்கியவர் பஞ்சு அருணாச்சலம்.
1977-ல் என்ன தவம் செய்தேன் என்ப படம் மூலம் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். சொன்னதைச் செய்வேன், நாடகமே உலகம், மணமகளே வா, புதுப்பாட்டு, கலிகாலம், தம்பி பொண்டாட்டி போன்ற படங்களை அவர் இயக்கினார்.
பஞ்சு அருணாச்சலம் கதை வசனத்தில் உருவான படங்கள் மட்டும் 179. இவை பெரும்பாலும் வெற்றிப் படங்களே. குறிப்பாக ஏவி எம் நிறுவனத்தில் எஸ்பி முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா கூட்டணியில் உருவான பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டவை.
பாடலாசிரியராக பஞ்சு அருணாச்சலம் செய்த சாதனை மகத்தானது. இளையராஜா இசையில் இவர் எழுதிய அத்தனையும் முத்தான பாடல்கள்.
பஞ்சு அருணாச்சலம் கடந்த இரு ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றியிருந்தார். அதனால் எழுதுவதையும் குறைத்துக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் நிலை தேறி மீண்டும் எழுத ஆரம்பித்தார். இளையராஜா இசையில் பாடல்களும், ஒரு படத்துக்கு கதை வசனமும் எழுத ஆரம்பித்த நேரத்தில் உடல் நிலை குன்றி மரணத்தைத் தழுவினார்.
பஞ்சு அருணாச்சலத்துக்கு அரு சண்முகம், சுப்பு பஞ்சு ஆகிய மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். சண்முகம் மற்றும் கீதா இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் சென்னை வந்த பிறகே பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.