கிரானைட் முறைகேடு: சகாயம் விசாரணைக்கு வராத பி.ஆர்.பி... நெஞ்சு வலியாம்...!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் விசாரணைக் குழு முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி ஆஜராகவில்லை. அவருக்கு நெஞ்சு வலி என்பதால் அவர் வரவில்லை. மாறாக அவரது வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன்படி அவர் தனது குழுவினருடன் மதுரை மாவட்டத்தில் விசாரணையை நடத்தி வருகிறார். இதுவரை 6 கட்ட விசாரணையை முடித்துள்ளார். விசாரணையின்போது கிரானைட் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் போலீசார் சகாயத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் சகாயம் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பாக விவரங்களை சேகரித்தார். இந்த நிலையில் நேற்று சகாயம் தனது இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கினார். நேற்று காலை முகாம் அலுவலகத்துக்கு வந்த அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் விசாரணை நடத்துவதற்காக 6 கிரானைட் அதிபர்களுக்கு சம்மன் அனுப்பினார். அதில் பி.ஆர்.பியும் ஒருவர். இருப்பினும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் வரவில்லை. மாறாக அவரது வக்கீல்களே ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இறுதிக்கட்ட விசாரணையை இந்த வாரத்திற்குள் சகாயம் முடிப்பார் என தெரிகிறது. அதன் பின் இதுவரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார்கள், தான் நேரடியாக சென்று ஆய்வு செய்த விவரங்கள் ஆகியவை அடங்கிய அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications