வாழ்க்கையிலேயே முதல் முறையாக எம்எல்ஏ வான நாராயணசாமி!
புதுச்சேரி : நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ள நாராயசாமி முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி 11, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் முதலமைச்சர் பதவியை அவர் தக்க வைத்துள்ளார்.
நாராயணசாமி இதுவரை ஒரு தடவை கூட எம்.எல்.ஏவாக இருந்ததில்லை. அவரது களம் டெல்லியாகவே இருந்தது.
3 முறை எம்.பி:
இதுவரை மூன்று முறை ராஜ்யசா உறுப்பினராக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் முதலாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற அலுவல்கள் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2014ல் தோல்வி:
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் தோற்றார். 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து நாராயணசாமி முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியினரால் நியமிக்கப்பட்டார்.
தியாகம் செய்த ஜான்குமார்:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாததையடுத்து அவர் தனது பதவியை தக்க வைக்க 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை சட்டசபை உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நாராயணசாமி களமிறங்கினார். அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் அவரை எதிர்த்து போட்டியிட்டார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ :
கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 18,707 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஓம்சக்தி சேகரை தோற்கடித்து நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மக்கள் கொடுத்த பரிசு:
தான் முதல் முறையாக வெற்றி பெற்றது குறித்து நாராயணசாமி கூறுகையில் புதுச்சேரியை ரவுடிகளிடமிருந்து மீட்டுள்ளோம். இதற்காக மக்கள் கொடுத்த பரிசுதான் இது என்று கூறியுள்ளார்.