புதுச்சேரி விபச்சார வழக்கு – சிறுமிகளை மீண்டும் தேடிவந்த புரோக்கர் புஷ்பா கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிறுமிகளைத் தேடி மீண்டும் வந்த விபச்சார புரோக்கர் புஷ்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்மணி:
அப்போது தவளக்குப்பம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் புஷ்பா என்ற பெண் சிறுமிகளையும், பள்ளி மாணவிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதைக் கண்டு பிடித்தனர். இதையடுத்து புஷ்பாவை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சஸ்பெண்ட்:
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மேலும் புஷ்பா மூலம் போலீசாரும் அந்த சிறுமிகளிடம் உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சமூக அமைப்பில் பாதுகாப்பு:
இதற்கிடையே விபசாரத்தில் ஈடுபடத்தப்பட்டதன் மூலம் குழந்தை பெற்ற 13 வயது சிறுமி உள்பட மற்ற சிறுமிகள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு சமூக அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக வில்லியனூர் கோபாலன்கடை பகுதியை சேர்ந்த தங்கம் என்ற பெண் இருந்து வந்தார்.
வெளியே வந்த புஷ்பா:
இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த விபசார கும்பல் தலைவி புஷ்பா கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 10 ஆம் தேதி சிறுமிகள் தங்கி இருந்த விடுதிக்கு சென்ற புஷ்பா அங்கு பாதுகாவலராக இருந்த தங்கத்திடம் சிறுமிகளின் போட்டோவை காட்டி இவர்கள் இங்கு உள்ளனரா என்று கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த பாதுகாவலர்:
புஷ்பா மீது சந்தேகம் அடைந்த பாதுகாவலர் தங்கம் விடுதியில் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதை மறைத்துவிட்டு இங்கு இதுபோன்று எந்த சிறுமிகளும் இல்லை என்று கூறிவிட்டார்.
பணத்தை கொடுத்து மீட்க முயற்சி:
இந்த நிலையில் விடுதியில் பணி முடிந்து தங்கம் நேற்று மாலை பஸ்சில் புறப்பட்டு வில்லியனூருக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த புஷ்பா பஸ்சை விட்டு இறங்கிய தங்கத்திடம் பணத்தை கொடுத்து சிறுமிகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
மிரட்டிய புஷ்பா:
ஆனால் பணத்துக்கு ஆசைப்படாமல் தங்கம் சிறுமிகள் பற்றிய தகவல்களை கூற மறுத்து விட்டார். ஆனால் தங்கத்தை புஷ்பா தொடர்ந்து மிரட்டினார். சிறுமிகளை ஒப்படைக்காவிட்டால் நடப்பதே வேறு என கூறி தங்கத்தை மிரட்டினார்.
சேலையை இழுத்து தகராறு
இதற்கு பயந்து தங்கம் அங்குள்ள கோவிலுக்கு சென்று பதுங்கினார். அங்கும் வந்த புஷ்பா ஆத்திரம் அடைந்து தங்கத்தின் சேலையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.
போலீசாரால் கைது:
இதையடுத்து தங்கம் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புஷ்பாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.