விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ப்ளஸ் 2 மாணவி மரணம்
சென்னை: அம்பத்தூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த மாணவியின் பெயர் ஆஷா என்பதாகும். இவர் சென்னை அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பரின் மகளாவார். இவர் அருகில் உள்ள எபினேசர் ஜகநாத் மார்க்கஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார்.
அம்பத்தூரில் உள்ள எபினேசர் ஜகநாத் மார்க்கஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்காக அப்பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அந்தப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் காலிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
காலை சுமார் 11.30 மணியளவில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் ஆஷாவும் பங்கேற்றார். இதர மாணவியரிடையே மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஆஷா, திடீரென எதிர்பக்கத்தில் இருந்து கயிறு விடுபட்டு, அவர் நின்றிருந்த பக்கத்தில் தளர்வடைந்து துவண்டதால் எதிர்பாராதவிதமாக ஆஷா கீழே விழுந்தார்.
இதைக் கண்ட ஆசிரியர்களும், சக மாணவியரும் ஆஷாவை கைத்தாங்கலாக பிடித்து, அந்த திடலில் இருந்த மேடைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்ததாக கூறப்படுகின்றது. முதலுதவி அளிக்க முயன்றபோது மயக்க நிலைக்கு சென்றுவிட்ட அவரை அங்கிருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி தனது காரில் ஏற்றிக்கொண்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தார்.
ஆஷாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசம்பாவித மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
மேற்படி தகுதிச்சுற்றுப் போட்டியை நடத்திய பள்ளியைச் சேர்ந்த சில ஆசிரியர்கள். உயிரிழந்த மாணவி ஆஷா, ஏற்கனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என கூறியதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications