விஜய் - முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்! - புரட்சி பாரதம்
கத்தி, புலிபார்வை ஆகிய சினிமா படங்களை தமிழகத்தில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடப் போவதாக புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை எதிர்த்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் நேற்று புரட்சி பாரதம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜெகன் மூர்த்தி பேசுகையில், "புலிபார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் துப்பாக்கி ஏந்தி வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பாலசந்திரனை தீவிரவாதி போன்று சித்தரிக்கும் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது. அது போல ராஜபக்சேவின் ஆதரவாளரின் நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தையும் வெளியிடக்கூடாது.
இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர்கள் தமிழர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் இல்லை என்றால் அதில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்.
இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் உடனடியாக அந்தப் படத்திலிருந்து விலக வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் புரட்சி பாரதம் மற்ற தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து போராடும்.
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். இப்படத்தில் இருந்து விலகாவிட்டால் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிடுவோம்," என்றார்.












Click it and Unblock the Notifications