நடராஜன் பிறந்த நாள் விழா- அதிமுகவினரின் லிஸ்ட் சேகரிக்கும் உளவுத்துறை போலீசார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழ் ஆசிரியருமான எம்.நடராஜனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று வந்த அதிமுக நிர்வாகிகளை தமிழக உளவுத்துறை போலீசார் லிஸ்ட் தயார் செய்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழ் ஆசிரியருமான எம்.நடராஜன், அதிமுக ஆட்சி அமைந்து சில மாதங்களிலேயே நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, ஜாமீனில் விடுதலையானார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அவர், என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றார்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்தது நானும் எனது மனைவியும் தான். நாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை. துரோகமும் செய்யவில்லை. அதிமுகவை உடைக்கவும் முயற்சிக்கவில்லை என்றும் பேட்டியளித்தார்.
இதனால், அவரது தொடர்பில் இருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் சற்று விலகியே இருந்தனர். ஆனால் , தற்போது , லோக்சபா வர உள்ள நிலையில், எம்.நடராஜனுக்கு மீண்டும் மவுசு கூடிவருகின்றதாம்.
இதனால், இம் முறை அவரது 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் களை கட்டியதாம். அவரை வாழ்த்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த, கோவை, திருப்பூர், ஈரோடு , நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ரகசியமாக சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்களாம்.
எம்.நடராஜனை சந்தித்தவர்கள் யார் யார் என்று கொங்கு மண்டல அதிமுகவில் ஒரு பட்டி மன்றமே நடைபெறுகின்றது.
மேலும், அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் பட்டியலை தமிழக உளவுத்துறை போலீசார் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications