புகார் தரப் போறியா?.. கொடு.. சட்டப்படி சந்திக்கத் தயார்.. ராதாரவி அதிரடி
சென்னை: என் மீது நடிகர் சங்கம் போலீஸில் புகார் கொடுத்தால் கொடுக்கட்டும், சட்டப்படி சந்திக்கத் தயார் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2011-ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக சங்க வளாகத்திலேயே செயற்குழு கூடியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது சரத்குமா, ராதாரவி மீது போலீஸில் புகார் கொடுப்பது என்பது.
அதாவது, 2014-15-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு கணக்குகளையும், அறக்கட்டளையின் 2013-14, 2014-15-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு 3 மாதங்கள் கழித்தும் முழுமையாகச் சமர்ப்பிக்காததால் சங்கத்தின் முந்தை நிர்வாகத் தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, என் மீது புகார் கொடுக்கப் போகிறார்களா.. அப்படியா.. எனக்குத் தெரியாதே.. கொடுத்தா கொடுக்கட்டும்.. அதை நான் சட்டப்படி சந்திக்கத் தயார் என்று ஜாலியாக சிரித்தபடி கூறினார் ராதாரவி.
இந்த விவகாரம் குறித்து இதுவரை சரத்குமார் தனது கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.