அதிகாரி வருகைக்காக அப்பாவி இளைஞருக்கு 'பளார்' விட்ட ரயில்வே போலீஸ்! ஈரோட்டில் பரபரப்பு!
அதிகாரி வரும் வழியில் சென்றதற்காக இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் சரமாரியாக அறைந்தனர்.
ஈரோடு: அதிகாரி வரும் வழியில் சென்றதற்காக இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் சரமாரியாக அறைந்தனர். இந்த சம்பவம் அங்கு திரண்டிருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரிபாபு என்ற 21 வயது இளைஞ பாலிடெக்னிக்கில் பட்டய படிப்பு முடித்து வேலைக்காக காத்து இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள அவரது அக்காவின் வீட்டுக்கு வந்த அவர் பெங்களூரு செல்வதற்காக நேற்று ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தார்.

ரயில் நிலையம் வந்ததும், தனது அக்காவிடம் செல்போனில் தகவலை கூறிக்கொண்டே நடைமேடைக்கு செல்லும் வழியில் நடந்து சென்றார். அப்போது அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் பணியில் இருந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென்று வாலிபர் அரிபாபுவை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைந்தார்.
என்ன நடக்கிறது என்பதை அறியாத அரிபாபு, ஏன் என்னை அறைந்தீர்கள்? என்று கேட்டதற்கு, சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு, ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வா அங்கே வைத்து சொல்கிறோம் என்றனர். நான் என்ன தவறு செய்தேன் எதற்காக வரவேண்டும் என அரிபாபு மீண்டும் கேட்டார்.
அதற்கு பதில் கூறிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ், இந்த வழியாக சேலம் கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் வர இருக்கிறார். அந்த வழியில் நீ சென்றதால் அடித்தோம் என்றனர்.
இதையடுத்து அங்கு நின்றிருந்த பொதுமக்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தசம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சந்திரபால் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். என்ன நடக்கிறது என்று கூட கேட்காமல் அவர்கள் சென்றுவிட்டனர்.
அதிகாரி வரும் வழியில் தெரியாமல் சென்றதற்காக ஒரு இளைஞரை பாதுகாப்புப்படை போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரம் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என மக்கள் முனுமுனுத்துக்கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications