தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை... சில் கிளைமேட்டால் மக்கள் 'மகிழ்ச்சி'!
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெயது வருகிறது.
தென்காசி: தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்காசியில் வெயிலுக்கு இதமாக மழை பெய்த வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கொளுத்தி வருகின்றது. சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலையை வெளியே காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது,
வெயிலின் தாக்கத்தால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்துவருகிறது. இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. செங்கோட்டை, குற்றாலம் ஆகிய நகரங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.
இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து சில்லென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.