சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புகள் ஏராளம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் நீர் நிலைகள் ஆங்காங்கே நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் லட்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.